கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையின் போது, 60 வயதிற்கு மேற்பட்ட மற்றும் தொற்றா நோய்களால் நீண்டகாலம் பீடிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சுகாதார அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக பதிவாகிய கொவிட் மரணங்களில் பெரும்பாலானவை மேல் மாகாணத்திலேயே சம்பவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் அதிகமானவர்கள் 60 வயதிற்கு மேற்பட்ட , தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத மற்றும் தொற்றா நோய்களால் பீடிக்கப்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதனால், 60 வயதிற்கு மேற்பட்ட மற்றும் தொற்றா நோய்களால் நீண்டகாலம் பீடிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தி, விசேட செயற்றிட்டம் ஒன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் கொவிட்-19 ஒழிப்பு விசேட குழுவுடன் இன்று முற்பகல் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
பிசிஆர் மற்றும் ஆன்டிஜென் பரிசோதனைகளை மேற்கொள்ளும் போது, 60 வயதிற்கு மேற்பட்ட மற்றும் பல்வேறு நோய்களால் பீடிக்கப்பட்டுள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
சிறுநீரக அறுவ சிகிச்சை அல்லது குருதி சுத்திகரிப்பிற்கு உட்படுத்தப்பட்ட நோயாளர்களை தனிமைப்படுத்தி வைக்க வேண்டியதன் அவசியத்தையும் இதன்போது ஜனாதிபதி எடுத்துரைத்துள்ளார்.