லண்டன்: உலகப் புகழ்பெற்ற English-Speaking Union International Public Speaking Competition (IPSC) 2026 போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய ஒமர் ஹசாரி வெற்றி பெற்று, நாட்டிற்கு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உலகப் பட்டத்தைப் பெற்றுத் தந்துள்ளார்.
கொழும்பு ரோயல் கல்லூரியைச் சேர்ந்த 19 வயதான மாணவர் ஒமர் ஹசாரி, லண்டனில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தனது ஆழமான மற்றும் உணர்வுபூர்வமான உரையால் நீதிபதிகளையும் பார்வையாளர்களையும் கவர்ந்தார். சிறுவயதில் எதிர்கொண்ட தொல்லைகள் (bullying) மற்றும் கடுமையான தடைமொழி (stutter) பிரச்சினையை எவ்வாறு சமாளித்தார் என்பதைக் கொண்டு அவர் உரையை அமைத்திருந்தார்.
தனக்கு கிடைத்த ஆதரவு மூலம் அந்த சவால்களை வென்றதோடு மட்டுமல்லாமல், தனது பாடசாலையில் தொல்லை எதிர்ப்பு இயக்கத்தையும் தொடங்கி, இதுவரை 3,000க்கும் மேற்பட்ட மாணவர்களை சென்றடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த IPSC போட்டி உலகின் மிகப்பெரிய பொது பேச்சுப் போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 45 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த தேசிய மட்ட வெற்றியாளர்கள் இதில் பங்கேற்கின்றனர். ஆண்டுதோறும் 100,000க்கும் அதிகமான மாணவர்கள் இதில் ஈடுபடுகின்றனர்.
குறிப்பாக, கடந்த 2025 ஆம் ஆண்டிலும் இலங்கை சார்பில் சஷானே தஸ்ஸநாயக்கே இந்தப் பட்டத்தை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்திருந்தார்.
இந்நிலையில், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த சாதனையைப் பதிவு செய்துள்ள இலங்கை, சர்வதேச அளவில் தனது திறமையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.


