இவ்வாண்டு செப்டெம்பர் மாதத்துக்கு முன்னர் நாட்டின் மொத்தச் சனத்தொகையில் பெருமளவானோருக்குக் கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கான விரிவான திட்டத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்துள்ளார்
தடுப்பூசி ஏற்றுதல் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்த கொவிட் ஒழிப்பு விசேட குழுவுடன், இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, ஜனாதிபதி இந்த திட்டத்தை முவைத்துள்ளார்
.
கொவிட் பரவும் ஆபத்து அடையாளம் காணப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து ஜூலை மாதத்துக்குள் கிடைக்கும் தடுப்பூசிகளை அம்மக்களுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஜூலை 11ஆம் திகதி கிடைக்கவிருக்கும் 2 மில்லியன் சைனோஃபார்ம் தடுப்பூசிகளை, கொழும்பு மாவட்டத்துக்கு 2 இலட்சம், கம்பஹாவுக்கு 5 இலட்சம், களுத்துறைக்கு 5 இலட்சம் என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்து
இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் மேல் மாகாணத்தில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கி முடிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் குறித்தும் நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் தூதரகங்களுக்கு விளக்கமளிக்க வேண்டியதன் தேவை பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
அமைச்சர்களான பவித்ரா வன்னியாரச்சி, பந்துல குணவர்தன, கெஹெலிய ரம்புக்வெல்ல, மஹிந்தானந்த அலுத்கமகே, பிரசன்ன ரணதுங்க, நாமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, சன்ன ஜயசுமன, சிசிர ஜயகொடி, பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சஞ்சீவ முனசிங்க, முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆகியோர் இச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.