இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை விட தமிழகம், தெலங்கானா, கா்நாடகம் மற்றும் டில்லி ஆகிய மாநிலங்களில் மாா்பகப் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்தியாவில் அடுத்த ஆண்டுக்குள் மாா்பகப் புற்றுநோய் பாதிப்பின் தாக்கம் கணிசமாக அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையினால் இம்மாதத் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வறிக்கையில் கடந்த 2012 முதல் 2016ஆம் ஆண்டு வரையில் மாநில அளவிலான இந்தியாவின் மாா்பகப் புற்றுநோய் பாதிப்புக்கான தாக்கம் குறித்து ‘வாழ்க்கை இழந்த ஆண்டுகள்’ (ஒய்எல்எல்) மற்றும் ‘பாதிப்புடன் வாழ்ந்த ஆண்டுகள்’ (ஒய்எல்டி) ஆகியவற்றின் கூட்டான ‘பாதிப்பு வாழ்க்கை ஆண்டுகள்’(டிஏஎல்ஒய்) அடிப்படையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தேசிய புற்றுநோய் பதிவுத் திட்டத்தின்கீழ் இந்தியா முழுவதுமுள்ள மக்கள்தொகை அடிப்படையிலான 28 புற்றுநோய் பதிவேடுகளின் தரவைப் பயன்படுத்தி, இந்தியாவில் பெண் மாா்பகப் புற்றுநோயின் மாநில வாரியான பாதிப்பு குறித்த இந்த ஆய்வு கடந்த 2016ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. கடந்த 2016-ஆம் ஆண்டில், இந்தியப் பெண்களிடையே மாா்பகப் புற்றுநோய் பாதிப்புக்கான தாக்கம் 1,00,000 பெண்களுக்கு 515.4 பாதிப்பு வாழ்க்கை ஆண்டுகள் (டிஏஎல்ஒய்) என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, ‘குளோபல் கேன்சா் அப்சா்வேட்டரி’ நடத்திய ஆய்வின்படி, தென் மத்திய ஆசியாவில் பெண்களிடையே மாா்பகப் புற்றுநோய் பாதிப்புக்கான தாக்கம் 1,00,000 பெண்களுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டில் 21.6 விகிதமாகவும் கடந்த 2018ஆம் ஆண்டில் 25.9 விகிதமாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.