3 ஆண்டுகளுக்கு முன்பு செக்யூரிட்டியாக பணியாற்றிய இளைஞர் ஷமர் ஜோசப், தற்போது உலகமே திரும்பிப் பார்க்கும் கிரிக்கெட் வீரராக உருவெடுத்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் புரட்டி எடுத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷமர் ஜோசப், பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். கயானாவில் உள்ள பராக்காரா என்ற நீர் சூழ்ந்த கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்த ஷமர் ஜோசப், கடந்த 2021-ஆம் ஆண்டு பாதுகாவலராக பணியாற்றியவர். பின்னர், கடும் முயற்சியால் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியில் இடம்பெற்ற ஷமர் ஜோசப், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுகமான முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
அதன் பின்னர் 2-வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க்கின் யார்க்கர் பந்துவீச்சு, ஷமர் ஜோசப்பின் காலை பதம்பார்த்தது. இதனால், அவர் தொடர்ந்து விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், 2-வது இன்னிங்ஸில் 7 விக்கெட் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியை வாரி சுருட்டினார்.
27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்ற நிலையில், வர்ணனையாளராக இருந்த முன்னாள் கேப்டன் பிரையன் லாரா கண் கலங்கினார். ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்த போதும், ஷமர் ஜோசப்பின் வெற்றியை, ஆஸ்திரேலியா முன்னாள் விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட் கொண்டாடினார்.
இதே போல, பயிற்சியாளர் Carl Hooper-உம் ஆனந்த கண்ணீர் வடித்தார். சில மாதங்களுக்கு முன்பு வரை இன்டெர்நெட் வசதியே இல்லாமல் இருந்த கிராமத்தில் பிறந்த ஷமர் ஜோசப், தனது கடின முயற்சியால் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகியுள்ளார்.