வயம்ப மஹ எல மற்றும் தெதுறு ஓயா நீர்ப்பாசன அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் காணப்படும் நிலப்பரப்பை மகாவலி பொருளாதார வலயமாக பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மகாவலி ஆற்றில் வழிந்தோடும் மேலதிக நீரை வடமேல் மாகாணம், வடமத்திய மாகாணங்களில் காணப்படும் கிளை ஆற்றுப்படுக்கைகளில் வாழும் கிராமிய மக்களின் விவசாயப் பொருளாதார செயன்முறைக்காக பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கும், குறித்த பிரதேசங்களில் குடிநீர் மற்றும் தொழிற்சாலைகளுக்கான நீர்த்தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குமான முன்னுரிமை கருத்திட்டமாக மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
குறித்த கருத்திட்டத்தின் கீழ், எதிர்வரும் நான்கு வருடங்களில் 88.9 கிலோமீற்றர்கள் நீளமான வயம்ப எல மற்றும் 95.7 கிலோமீற்றர்கள் நீளமான வடமத்திய மஹ எல போன்ற செயற்கை ஆறுகள் இரண்டையும் நிர்மாணிப்பதற்கும், 07 புதிய நீர்த்தேக்கிக் களஞ்சியங்கள் மூலம் 1,500 கிராமியக் குளங்களைப் போசிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல், தற்போது தெதுறு ஓயாவை குறுக்கறுத்து நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் பணிகள் மற்றும் அதன்கீழுள்ள கட்டுமானங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த கருத்திட்டத்தின் கீழ் 200 சிறிய குளங்கள் மூலம் 25,000 ஏக்கர்களில் இருபோகங்களும் பயிரிடக்கூடிய வகையில் நீர்ப்பாசன வசதிகளை வழங்குவதற்கும், 50,000 புதிய நுகர்வோர்களுக்கான குடிநீர் வசதிகளை வழங்குவதற்கும், 1.5 மெகாவாற்றுடன் கூடிய மீள்பிறப்பாக்க எரிசக்தி கருத்திட்டத்தின் மூலம் மின்னுற்பத்தி செய்வதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மேற்படி இரண்டு கருத்திட்டங்களின் கீழ், குருணாகல், புத்தளம், அநுராதபுரம் மற்றும் மாத்தளை போன்ற மாவட்டங்களில் 26 பிரதேச செயலகப் பிரிவுகளை உள்ளடக்கியதாக குறைப்பயன்பாட்டு அபிவிருத்தி கொண்ட பிரதேசங்களை துரிதப்படுத்தல் மற்றும் ஒன்றிணைந்த கிராமிய அபிவிருத்தி செயன்முறை மூலம் அபிவிருத்தி செய்வதற்கு அடையாளங் காணப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த வலயங்களுக்கு ஏற்புடைய அனைத்து அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் ஒன்றிணைந்த முதலீட்டுத் திட்டமொன்றைத் தயாரித்து எதிர்வரும் மூன்று வருடங்களில் குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, குருநாகல், புத்தளம், அநுராதபுரம் மற்றும் மாத்தளை மாவட்டங்களில் 26 பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் 410 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய நிலப்பரப்பு அதிகார எல்லைப் பிரதேசத்தை, 1979 ஆம் ஆண்டு 23 ஆம் இலக்க இலங்கை மகாவலி அதிகாரசபை சட்டத்தின் கீழ் மகாவலி விசேட அதிகார பிரதேசமாக பிரகடனப்படுத்தி ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தி செயன்முறையின் கீழ் அபிவிருத்தி செய்வதற்காக நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.