கடந்த சித்திரை புத்தாண்டை முன்னிட்டு கடந்த வாரம் வரை எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டதுடன், பின்னர் மேலும் ஒரு வாரத்துக்கு அது நீடிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஒதுக்கீட்டு அதிகரிப்பை மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று ட்விட்டர் பதிவில் தெரிவித்தார்.
தற்போது, முச்சக்கரவண்டிளுக்கு 5 லீற்றரில் இருந்து 8 லீற்றராகவும், மோட்டார் சைக்கிள்களுக்கு 4 லீற்றரில் இருந்து 7 லீற்றராகவும், பஸ்களுக்கு 40 லீற்றரிலிருந்து 60 லீற்றராகவும், கார்களுக்குகளுக்கு 20 லீற்றரிலிருந்து 30 லீற்றராகவும், மண் அகழ்வு வாகனங்களுக்கு 15 லீற்றரில் இருந்து 25 லீற்றராகவும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அவ்வாறே பாரவூர்திகளுக்கு 50 லீற்றரிலிருந்து 75 லீற்றர் வரையும் சிறப்பு நோக்க வாகனங்களுக்கு 20 லீற்றரிலிருந்து 30 லீற்றர் வரையிலும், வேன்களுக்கு 20 லீற்றரிலிருந்து 30 லீற்றர் வரையும் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.