பேராதனை பல்கலைகழகத்தின் முன்னாள் உபவேந்தர் மற்றும் அவரது மகனைத் தாக்கிய குற்றச்சாட்டில் இதுவரை 10 பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் புவியியல் சிரேஷ்ட பேராசிரியர் அத்துல சேனாரத்ன மற்றும் அவரது மகன் ஆகியோர் மற்றும் அவரது வீட்டின் மீது கடந்த சனிக்கிழமை (10) இரவு மாணர்கள் சிலரால் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பில் 12 பல்கலை மாணவர்களை தற்காலிகமாக இடைநீக்கம் செய்ய பல்கலைக்கழக நிர்வாகம் நேற்று நடவடிக்கை எடுத்திருந்தது.
இப்பின்னணியிலான விசாரணைகளின் அடிப்படையில், நேற்றிரவு சம்பவம் தொடர்பில் 6 மாணவர்கள் பேராதனை பொலிஸ் நிலையத்திற்கு வந்து சரணடைந்ததைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் 6 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்த நிலையில் அவர்களில் 4 பேரை இன்றையதினம் (13) பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைதான சந்தேகநபர்கள் 23 முதல் 25 வயதுடைய, நிட்டம்புவ, சந்தலங்கல, கிரித்தலை, மாத்தளை, ஹேனேகமுவ, கலகம்வத்தை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை இரவு (10) பேராசிரியரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது அவரது மகனின் கார் மோதியதாக தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் சிலருடன் ஏற்பட்டட வாக்குவாதத்தை தொடர்ந்து குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.