ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிருக்கான இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இலங்கை மகளிர் அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது.
இன்று (18) இடம்பெற்ற மூன்றாவது காலிறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் மலேசிய அணிகள் மோதியிருந்தன.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றது.
இந்நிலையில் 161 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய மலேசிய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 74 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 86 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
குறித்த வெற்றியின் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.


