அரசாங்கம் ஆசிரியர் அதிபர்களின் சம்பள முரண்பாடு, நிலுவை சம்பளம், பதவி உயர்வு, இடமாற்றம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணாது தொழில் சங்கங்களை அடக்கி ஒடுக்கும் செயற்பாடுகளில் அரசாங்கம் இறங்கியுள்ளது.
இவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது ஒன்லைன் கற்பித்தலில் இருந்து ஆசிரியர்கள் விலகியுள்ளனர்.
ஆசிரியர் அதிபர்களின் பிரச்சினைக்கு உடன் தீர்வு கொடுக்காமல் தொடர்ந்தும் இழுத்தடிக்கப்படுமானால் 45 தொழில் சங்கங்கள் இணைந்து போராட்டத்தினை முன்னெடுக்க போவதாக தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பாலசேகரம் தெரிவித்தார்.
இன்று தலவாக்கலையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இன்று ஆசிரியர்கள், அதிபர்களை பொருத்த வரையில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
அவர்களுக்கென்று முறையான இடமாற்று சுற்று நிரூபம் கிடையாது. நிலுவை சம்பளம் முறையாக வழங்கப்படாது பல வருட கணக்கில் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன. பதவி உயர்வுகள் முறையாக நடைபெறுவதில்லை. ஒன்லைன் கற்பித்தல் முறையை எடுத்துக்கொண்டால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சொந்த பணத்தினை செலவு செய்து இணைய வழி ஊடான கற்பித்தலை மேற்கொண்டு வருகின்றர்.
அதற்காக அரசாங்கம் இலவச இணைப்புக்களை கூட பெற்றுக் கொடுக்கவில்லை. இந்நிலையில் இவர்களின் பிரச்சினைகள் காலம் காலமாக தீர்க்கப்படாது அரசாங்கம் காலம் கடத்தி வருகின்றது.
இதனை தீர்ப்பதற்காகவும் கல்வியினை தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தொழில் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடும் போது அவர்களுக்கு எதிராக முறையற்ற விதத்தில் சட்டங்களை பிரயோகித்து வருகின்றது. இவற்றிக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஒன்லைன் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனையும் அரசாங்கம் கண்டு கொள்ளாவிட்டால் 45 தொழிற்சங்கங்கள் இணைந்து பாரிய போராட்டத்தினை முன்னெடுக்கப் போவதாகவும், இதற்கான கலந்துரையாடல் தற்போது இணைய வழி ஊடாக இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த கோரிக்கைகளை வெற்றி கொள்வதற்காகவும் வலு சேர்ப்பதற்காகவும் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட கல்விசார் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒத்துழைக்க வேண்டும் எனவும், இதற்கு கட்சி, தொழிற்சங்க பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அப்போது தான் காலம் கடந்த ஆசிரியர்களினதும் அதிபர்களினதும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும்.
ஒரு சில தொழிற்சங்கள் அரசியல் கட்சிகளை சார்ந்துள்ளதால் அந்தந்த அரசியல் கட்சிகள் ஆட்சியில் இருக்கும் போது அவர்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்த முடியாத நிலை ஏற்படுவதாகவும் எனவே ஆசிரியர்கள் இவற்றை உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.