மூன்று மாதங்களாக முற்றுகையிடப்பட்ட காசாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற மேடலின் என்ற கப்பலை இஸ்ரேல் தடுத்து வைத்துள்ளது.
அந்தக் கப்பல் இஸ்ரேலின் ஆஷ்டோட் துறைமுகத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
சுதந்திர புளோட்டிலா இயக்கத்தின் ஒரு பகுதியாக, காலநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் தலைமையிலான 12 தன்னார்வலர்களை அந்தக் கப்பல் ஏற்றிச் சென்றது.
இஸ்ரேல் முற்றுகையை நீக்கி காசாவிற்கு ஒரு மனிதாபிமான வழித்தடத்தைத் திறக்கும் என்று துன்பெர்க் கூறியிருந்தார். மேடலின் கப்பல் காசா கடற்கரையை அடைவதைத் தடுக்கும் என்று இஸ்ரேல் எச்சரித்திருந்தது.
கப்பலைக் கைப்பற்றி அதைத் திருப்பிய இஸ்ரேல், அந்தப் பயணத்தை ‘பிரபல செல்ஃபி கப்பல்’ என்று கேலி செய்துள்ளது.
கப்பலில் உள்ள பயணிகள் காசாவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், அவர்கள் தங்கள் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் இஸ்ரேல் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் பிரெஞ்சு உறுப்பினர் ரிமா ஹாசன், நடிகை லியான் கன்னிங்ஹாம் மற்றும் ஜெர்மன் மனித உரிமை ஆர்வலர் யாஸ்மின் அகார் ஆகியோரும் இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இணைந்துள்ளனர்.
சர்வதேச சட்டத்தை மீறும் இஸ்ரேலிய முற்றுகையை உடைக்கும் அதே வேளையில், இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற நடைமுறைகளை உலகிற்கு அம்பலப்படுத்துவதே இந்த பயணத்தின் நோக்கமாகும்.
இந்த பயணத்தை ஃப்ரீ காசா இயக்கத்தின் காசா ஃப்ரீடம் ஃப்ளோட்டிலா ஏற்பாடு செய்துள்ளது. ஜூன் முதலாம் திகதி இத்தாலியின் மத்திய தரைக்கடல் தீவுப் பகுதியான சிசிலியிலிருந்து கப்பல் பயணத்தை ஆரம்பித்திருந்தது.
இதற்கிடையில், இஸ்ரேலிய இராணுவம் காசாவில் தனது படுகொலைகளை நடவடிக்கைகளை தொடர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், காசாவில் 108 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உணவு தேடிய மக்கள் மீது இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
எரிபொருள் துண்டிக்கப்பட்டால் மீதமுள்ள காசாவின் மருத்துவமனைகள் மூடப்படும் நிலையில் உள்ளன. கான் யூனிஸில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் எட்டு குழந்தைகள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.
ரஃபாவில் உள்ள இரண்டு காசா மனிதாபிமான அறக்கட்டளை உணவு விநியோக மையங்கள் மீது நடத்தப்பட்ட புதிய ஷெல் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காசாவில் சுகாதார அமைப்பு முற்றிலும் சீர்குலைந்த நிலையில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சர்வதேச மருத்துவ மற்றும் மனிதாபிமான உதவி அதிகாரிகள் காசா இனப்படுகொலையின் மிக மோசமான கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக எச்சரித்தனர்.