ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.
இதனையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது.
இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்தைத் தொடர்ந்து பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கும் திகதியை பிசிசிஐ அறிவித்துள்ளது. பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, போட்டிகள் மீண்டும் எதிர்வரும் 17 ஆம் திகதி (சனிக்கிழமை) தொடங்குகின்றன. ஜூன் 3 ஆம் திகதி இறுதிப் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரோன் தாக்குதலால் பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி மே 24 ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது. நிறுத்தம் செய்யப்பட்ட ஓவர்களில் இருந்து இந்த போட்டி தொடங்கும் என கூறப்படுகிறது.
ப்ளே ஆஃப் சுற்றுகளையும் சேர்த்து மொத்தம் இன்னும் 17 போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இவை பெங்களூரு, ஜெய்ப்பூர், டெல்லி, லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 6 இடங்களில் மட்டுமே நடைபெறும். இதில் எதுவும் சேப்பாக்கத்தில் நடைபெறாது.
ப்ளே ஆஃப் சுற்று விபரங்கள்:
குவாலிபையர் 1 – மே 29
எலிமினேட்டர் – மே 30
குவாலிபையர் 2 – ஜூன் 1
இறுதிப் போட்டி – ஜூன் 3 ஆம் திகதி முறையே நடக்க உள்ளது.