இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் 77 ஆவது தேசிய சுதந்திர தின விழாவை ஒட்டியதான இஸ்லாமிய சமய நிகழ்வுகள் இன்று காலை 6 மணி முதல் கொழும்பு 6, வெள்ளவத்தை ஜும்ஆப் பள்ளிவாசலில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
“தேசிய மறுமலர்ச்சிக்காய் ஒன்றிணைவோம்” என்ற மகுடம் தாங்கி இம்முறை தேசிய சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வுக்கு தலைமை வகித்தார் இலங்கை பாராளுமன்ற பிரதி சபாநாயகர் கௌரவ வைத்தியர் ரிஸ்வி ஸாலி அவர்கள். நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டார் தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் கௌரவ முனீர் முளப்பர் அவர்கள்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் அர்க்கம் நூரமித் அவர்கள் முஸ்லிம் சமய வாழ்த்துரையை வழங்கினார். ஜம்இய்யாவின் பிரதிநிதிகளாக ஆலிம்கள் பலரும் வருகை தந்திருந்தனர்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தியதோடு, உதவிப் பணிப்பாளர்களான என்.நிலோபர் மற்றும் M.S அலா அஹமத் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முப்தி முர்சி, வக்ஃப் நியாய சபை பதில் செயலாளர் M.N.M. ரோஸன் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
வெள்ளத்தை ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் அல்ஹாஜ் முஹம்மத் ரிஸ்zவி உட்பட நிர்வாக சபை உறுப்பினர்கள், ஏனைய பள்ளிவாசல்களைச் சேர்ந்த நிர்வாக சபை பிரதிநிதிகள் என்போரும் வந்திருந்தனர்.
ஆலிம்கள், அரசியல் தலைவர்கள், அதிதிகள் மற்றும் அதிகாரிகள் எனப் பலரும் இந்நிகழ்வில் பிரசன்னமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. அதேபோல், பல்வேறு ஊடக நிறுவனங்களையும் சேர்ந்த ஊடகவியலாளர்கள் வருகை புரிந்து தம் பணிகளை செவ்வனே நிறைவேற்றினர்.
இந்நிகழ்வினை தொகுத்து வழங்கினார் ஊடகப் பயிற்றுவிப்பாளரும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான இஸ்பஹான் சாப்தீன் அவர்கள்.
2025 02 04