எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான அனைத்து கடமைகளையும் எந்தவித தடையுமின்றி செய்வதற்கு கிராம உத்தியோகத்தர்கள் கூட்டமைப்பு இதற்கு முன்னர் இணக்கம் தெரிவித்திருந்த நிலையில், அந்த விடயம் குறித்து அவர்களுடன் மீண்டும் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
கிராம உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க நடவடிக்கையினால் தேர்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா என தேர்தல் ஆணைக்குழு தலைவர் R.M.A.L.ரத்நாயக்கவிடம் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், கிராம உத்தியோகத்தர்கள் அனைத்து செயற்பாடுகளிலிருந்தும் இன்று (12) மற்றும் நாளை (13) விலகியிருப்பதுடன், தொடர் எதிர்ப்பு நடவடிக்கைக்கான வாரமாக இந்த வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர் சேவை யாப்புக்கு, தமது கோரிக்கைகள் உள்வாங்கப்படவில்லை என தெரிவித்தே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அந்த கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க தெரிவிக்கின்றார்.
அத்துடன், பொது நிர்வாக அமைச்சுக்கு முன்பாக இன்று அமைதியான முறையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடாத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்