ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு 10 ஆண்டுகள் சிறைப்படுத்தப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தபால் மூலம் வாக்களித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இம்ரான் கான் தபால் மூலம் வாக்களித்த போதிலும், சிறை தண்டனை பெற்று வரும் அவரது மனைவி புஷ்ரா பீபி வாக்களிக்கும் வாய்ப்பை இழந்ததுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இன்று பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்புடன் நடைப்பெற்று வருகிறது.
வாக்குச் சாவடிக்கு வாக்காளர்கள் வந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி மொத்தம் 12 கோடியே 85 இலட்சத்து 85 ஆயிரத்து 760 பேர் வாக்களிக்க தகுதியுடைவர்கள் என தெரிகிறது.
இவர்கள் வாக்களிப்பதற்காக நாடு முழுவதும் 9 இலட்சத்து 7 ஆயிரத்து 675 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் எந்தவித இடையூறும் இன்றி வாக்களிக்க ஏதுவாக பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலையொட்டி பொலிஸார், சிறப்பு ஆயுதப்படை வீரர்கள், இராணுவ வீரர்கள் என சுமார் 6 இலட்சத்து 50 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்குப்பதிவு முடிந்ததும் விரைவில் எண்ணும் பணி தொடங்கும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.