தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியா 1957 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. அங்கு தேர்தல் நடைபெற்று பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், மன்னரின் அதிகாரம் நிலைத்து, நீடித்து வருகிறது.
முக்கிய அரசியல் நியமனங்களை மேற்பார்வையிடுவது, இஸ்லாத்தின் அதிகாரப்பூர்வ தலைவராக இருப்பது, மலேசியா நாட்டின் ஆயுதப்படைகளின் தளபதி என பல்வேறு பொறுப்புகளில் மன்னர் இருக்கிறார்.
நீதிமன்றங்களால் கொடுக்கப்படும் தண்டனைகளை இரத்து செய்யும் அதிகாரமும் மன்னருக்கு உள்ளது.
இந்நிலையில், மலேசியாவின் புதிய மன்னராக இப்ராஹிம் இஸ்கந்தார் (65) நேற்று முன்தினம் (31) பொறுப்பேற்றுள்ளார்.
மலேசியாவில் 13 மாகாணங்கள் உள்ளன. இவற்றில் 9 மாகாணங்களில் அரச குடும்பங்கள் உள்ளன. இந்த அரச குடும்பங்களில் இருந்து, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் மலேசியாவிற்கான மன்னர் தெரிவு இடம்பெறுகிறது.
இந்நிலையில், ஜோஹர் மாகாணத்தின் சுல்தானாக பொறுப்பு வகித்து வந்த இப்ராஹிம் இஸ்கந்தார், தற்போது மலேசியாவின் புதிய மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று அவருக்கு முடிசூட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.
மலேசியாவின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவராக இப்ராஹிம் இஸ்கந்தார் திகழ்கிறார். அவரது அதிகாரப்பூர்வ சொத்து மதிப்பு 5.7 பில்லியன் டொலர் ஆகும். ஆனால், அவரது உண்மையான சொத்து மதிப்பு இதை விட பலமடங்கு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ரியல் எஸ்டேட், சுரங்கம், தொலைத் தொடர்பு வரை பலதரப்பட்ட துறைகளில் அவர் கால்பதித்துள்ளார். ‘யு மொபைல்’ என்ற மலேசியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனத்தின் 24% பங்குகள் அவர் வசம் உள்ளது.
பங்குச்சந்தையில் மாத்திரம் 1.1 பில்லியன் டொலர் முதலீட்டை அவர் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போயிங் உட்பட தனியார் ஜெட் விமானங்கள், 300 சொகுசு கார்கள் அவருக்கு சொந்தமாக உள்ளன. அவரது குடும்பத்தினருக்கென்று தனி இராணுவமும் உள்ளது.
உலகிலேயே சுழற்சி முறையில் மன்னரை தேர்ந்தெடுக்கும் நடைமுறை மலேசியாவில் மட்டுமே உள்ளது.
நாட்டின் நிர்வாக அதிகாரம் பிரதமர் மற்றும் பாராளுமன்றம் வசமே இருக்கும். எனினும், மதம் மற்றும் பண்பாட்டை பாதுகாக்கும் பொறுப்பு மன்னர் வசமே உள்ளது.