ரத்மலானை கந்தவல சந்தைக்கு அருகில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை புரிந்த சந்தேகநபர்கள் இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 1ஆம் திகதி கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரத்மலானை கந்தவல சந்தைக்கு அருகில் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாகக் கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பரந்தளவிலான விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (13) இந்தக் குற்றத்திற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பில் ஒரு சந்தேகநபர் ரத்மலானைப் பகுதியில் 22 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மற்றொரு சந்தேகநபரை அன்றைய தினமே தெஹிவளைப் பகுதியில் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 41 மற்றும் 48 வயதுடைய தெஹிவளைப் பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
இந்தச் சந்தேகநபர்கள் குற்றத்திற்காகத் துப்பாக்கிகளைக் கடத்திச் சென்றுள்ளமை, அத்துடன் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் மறைந்திருப்பதற்கு தேவையான வசதிகளைச் செய்து உதவி ஒத்தாசை புரிந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


