ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன்பெர்ணான்டோவின் வீட்டில் சந்திப்பொன்று நடைபெறுவதாகவும் அதில் பலர் கலந்துகொண்டுள்ளனர் எனவும் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்து பொலிஸார் வீட்டை சோதனையிட்டுள்ளனர்.
வத்தளையில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் சுமார் 25 பொலிஸார் காணப்பட்டனர் என ஹரீன்பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டவேளை தனது வீடு அமைந்திருந்த ஒழுங்கையை மறித்தபடி நான்கு பொலிஸ் வாகனங்கள் காணப்படுவது தெரியவந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
ஒழுங்கைக்குள் பொலிஸ்சோதனை சாவடியொன்றும் உருவாக்கப்பட்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
தனது வீட்டின் வாசலில் ஐந்து அல்லது ஆறு பொலிஸார் காணப்பட்டவேளை நான் வெளியே சென்று அவர்கள் அங்கு காணப்படுவதற்கு என்ன காரணம் என கேட்டேன் என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
அதற்கு எனது வீட்டில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது பேருந்தில் பொதுமக்கள் வந்துகொண்டிருக்கின்றார்கள் என தகவல் கிடைத்தது என சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார் என ஹரீன்பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.
வீட்டிற்குள் கூட்டம் இடம்பெறுகின்றதா என பார்ப்பதற்காக சிலர் பொலிஸாரை பயன்படுத்தினார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீட்டை சோதனையிட்ட அவர்கள் கூட்டம் இடம்பெறவில்லை என்பதை உறுதி செய்த பின்னர் அங்கிருந்து சென்றனர் என ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.