இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொவிட் திரிபான G.1.617.2 டெல்டா வகை வைரஸ் தொற்றைக் கொண்ட ஐந்து பேர் கொழும்பின் தெமட்டகொடை பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நீர்ப்பீடனம் மற்றும் கல உயிரியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
தனது ட்விற்றர் கணக்கில் இது தொடர்பில் பதிவிட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த வகை திரிபானது தற்போது நாட்டில் நிலவும் B.1.1.7 அல்பா வகை திரிபை விட இருமடங்கு வேகமாக பரவக்கூடியதென அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தடுப்பூசியின் ஒரு டோஸுக்கு கட்டுப்படியாகது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது ஒரு டோஸ் மாத்திரம் கொவிட்-19 தடுப்பூசி பெற்றவர்களுக்கு இத்திரிபிற்கு எதிரான நோயெதிர்ப்பு எந்த அளவில் காணப்படும் என வைத்தியர் சந்திம ஜவந்தரவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, அது சுமார் 33% (1/3) பாதுகாப்பாகும் என்பதோடு, அது போதுமானதல்ல என பதிலளித்துள்ளார்.
தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் இந்திய கொவிட் திரிபான டெல்டா (பி 1.6.617.2) வகையிலிருந்து உருவான மற்றுமொரு புதிய திரிபு அவதானிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
டெல்டா திரிபை விட வேகமாக பரவுவதாகக் கூறப்படும் இந்த திரிபானது AY.1 அல்லது டெல்டா பிளஸ் என அழைக்கப்படுகிறது.
தற்போது, இதன் தொற்றைக் கொண்ட வகை 63 நோயாளிகள் உலகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஜூன் 11ஆம் திகதி இந்தியா வெளியிட்டுள்ள கொவிட் தொற்று அறிக்கையில், இப்புதிய வகை நோய்த்தொற்றுடைய 6 நோயாளிகள் அந்நாட்டில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் 2 நோயாளிகள், சுவிட்சர்லாந்தில் 4 பேர், போலந்தில் 9 பேர், போர்த்துக்கல்லில் 12 பேர், ஜப்பானில் 13 பேர், அமெரிக்காவில் 14 பேர், கனடா, ஜேர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகளில் இவ்வகை திரிபு தொற்றிய தலா ஒவ்வொருவர் பதிவாகியுள்ளனர்.
ஆயினும், தற்போதுள்ள கொவிட் தடுப்பூசிகள் இத்திரிபுகளுக்கு உரிய பதிலளிப்பை காண்பிக்கவில்லையென சுகாதார அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.