சீனாவின் சினோபாம் கொவிட்-19 தடுப்பூசியின் ஒரு மில்லியன் டோஸ்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன.
இன்று (09) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த தொகுதிகள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக, இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட குறித்த தடுப்பூசிகள் சீனாவினால் உறுதியளிக்கப்பட்டதற்கு அமைய இவ்வாறு வழங்கப்பட்டுள்ளதாக தூதரகம் விடுத்துள்ள ட்விற்றர் இடுகையில் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கடந்த 3 நாட்களுக்குள் 2 மில்லியன் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக சீன தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
அத்துடன் சீனா அன்பளிப்பு செய்த 5 இலட்சம் டோஸ் தடுப்பூசிகள் உள்ளிட்ட 2.5 மில்லியன் டோஸ் சினோபாம் தடுப்பூசிகள், கடந்த 2 வாரங்களுக்குள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தூதரகம் அதில் குறிப்பிட்டுள்ளது.
அந்த வகையில் கடந்த மார்ச் மாதம், சீனாவிடமிருந்து இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 6 இலட்சம் சினோபாம்தடுப்பூசியுடன் இதுவரை மொத்தமாக 3.1 மில்லியன் சினோபாம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.