தற்போதுள்ள பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பது தொடர்பில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என கொவிட்-19 தொற்றை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியில் இன்று காலை நேர நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதே அவர் இதைத் தெரிவித்தார்.
இது குறித்து விளக்கமளித்த அவர், இன்று காலை வரை பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்க எவ்வித பரிந்துரையும் பெறப்படவில்லை எனக் கூறினார்.
”ஜனாதிபதி அல்லது செயலணியிடமிருந்து இது போன்ற எந்தவொரு பரிந்துரையும் பெறப்படவில்லை; வழக்கமாக அவ்வாறு இருந்தால் இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும்” என்றார்.
முன்னதாக அறிவிக்கப்பட்டபடி ஜூன் 14இல் பயணக் கட்டுப்பாடுகளை நீக்க இன்னும் ஒரு வாரம் உள்ளது எனக் கூறிய அவர், நாட்டின் நிலைமையை ஆராய்ந்த பின்பே ஒரு முடிவு எடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.