பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (22) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதற்காக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சபையில் இருக்குமாறு அரசாங்கமும் எதிர்க்கட்சியும் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு கடந்த 12ஆம் திகதி நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
கடந்த 13 ஆம் திகதி தொடங்கிய இந்த விவாதத்தின் ஏழாவது நாள் இன்றாகும். பாதீடு மீதான குழுநிலை விவாதம் நாளை (23) ஆரம்பமாகி அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை 16 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.
பாதீடு மீதான இறுதி வாக்கெடுப்பு எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பாதீட்டுக்கு எதிராக வாக்களிக்கத் தீர்மானித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் நேற்று (21) பிற்பகல் கூடி, பாதீட்டுக்கு எதிராக வாக்களிக்க ஏகமனதாக தீர்மானித்ததாக கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் நேற்று (21) கூடி பாதீட்டுக்கு எதிராக வாக்களிக்கத் தீர்மானித்ததாக அந்தக் கட்சியின் சட்டத்துறை பணிப்பாளர் சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் தெரிவித்தார்.
மேலும், இன்று (22) நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஏனைய கட்சிகள் அதற்கு ஆதரவாக வாக்களிக்கத் தீர்மானித்துள்ளன.