வெனிசுவேலா நாட்டின் நீண்டகால ஜனாதிபதியாக இருந்த நிக்கோலஸ் மதுரோவை, அமெரிக்கப் படைகள் அதிரடியாகத் தாக்கிப் பதவியிலிருந்து நீக்கியுள்ள சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை நாளை (5) அவசரமாகக் கூடவுள்ளது.
நேற்று அதிகாலையில் வெனிசுவேலா மீது வான்வழித் தாக்குதல்களை நடத்திய அமெரிக்க இராணுவம், மதுரோ மற்றும் அவரது மனைவியைக் கைது செய்து அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றுள்ளது.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “வெனிசுவேலாவில் ஒரு முறையான மற்றும் பாதுகாப்பான ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை அமெரிக்கா அந்த நாட்டை நிர்வகிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மதுரோ ஒரு சட்டவிரோத சர்வாதிகாரி என்றும், அவர் மீது போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதனிடையே, இந்த நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் அந்டோனியோ குட்டெரஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். இது ஒரு “ஆபத்தான முன்னுதாரணத்தை” ஏற்படுத்தியுள்ளதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.
சர்வதேசச் சட்டங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சாசனத்தை அனைத்து நாடுகளும் மதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு வெனிசுவேலா தூதுவர் சாமுவேல் மொன்காடா எழுதியுள்ள கடிதத்தில், அமெரிக்காவின் இந்தச் செயல் “தங்கள் நாட்டின் குடியாட்சியை அழித்து, இயற்கை வளங்களைச் சுரண்டுவதற்காக ஒரு பொம்மை அரசாங்கத்தை உருவாக்கும் காலனித்துவப் போர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இறையாண்மை கொண்ட ஒரு நாட்டின் மீது பலத்தை பிரயோகம் செய்வது ஐக்கிய நாடுகள் சாசனத்திற்கு எதிரானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த பின்னணியில் கொலம்பியா விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதரவுடன் இந்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டம் நடைபெறவுள்ளது.
வெனிசுவேலாவுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஒக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்குப் பின்னர் மூன்றாவது முறையாகப் பாதுகாப்பு சபை கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






