தென்மேல் பருவப் பெயர்ச்சி மழை எதிர்வரும் சில தினங்களில் வலுவடையவுள்ள நிலையில், கண்டி நகரம் பாரிய வெள்ளப் பெருக்குக்கு உள்ளாகும் அபாயம் காணப்படுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் விஞ்ஞான பிரிவின் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழையுடனான வானிலையின் போது, கண்டி நகரின் பல பகுதிகள், பல சந்தர்ப்பங்களில் நீரில் மூழ்கியிருந்தமை தொடர்பில் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கண்டி நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முறைசாரா மற்றும் சட்டவிரோத நிர்மாணப் பணிகளினால் இந்த அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
மகாவலி கங்கையுடன் கூடிய உயரமான இடத்தில் அமைந்துள்ள கண்டி நகரின், மழை நீர் மற்றும் ஏனைய கழிவு நீர் வெளியேறும் இரண்டு பிரதான கால்வாய்களை அடைக்கும் வகையில் முறைசாரா மற்றும் சட்டவிரோத நிர்மாணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையினால், சிறு மழை பெய்தாலும் கண்டி நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக சிரேஷ்ட பேராசிரியர் கூறியுள்ளார்.