திருகோணமலை ஸாஹிரா கல்லூரியில் உயர்தரப் பரீட்சை எழுதிய எழுபது மாணவிகளது பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்ப்பட்டுள்ளது. அவர்கள் கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதர நெருக்கடிக்கு மத்தியில் சிரமப்பட்டு கல்விகற்று பரீட்சைக்கு தோற்றி பல்கலைக்கழகம் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவர்கள் எனவும் பர்தா அணிந்து பரீட்சை மண்டபத்திற்கு சென்றதால் அவர்களுடைய அடையாளம் சரியாக உறுதிப்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டு பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டு ஸாஹிரா கல்லூரி மாணவர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகதிருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை (3) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் இது தொடர்பில் உரையாற்றுகையில், இவ்விடயம் தொடர்பில் தானும் பரீட்சை திணைக்களத்திற்கு சென்று உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடினேன் ஓரிரு வாரங்களுக்குள் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடயிருப்பதாக தெரிவித்தனர் என்றும் பெறுபேறுகளை விரைவாக வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் அவர் உரையாற்றுகையில், முத்துநகர் பிரதேசமானது சுமார் 1970 ம் ஆண்டு முதல் விவசாயம் செய்துவந்த காணிகளை தனியாருக்கு கொடுப்பதற்கு முயற்சிகள் நடைபெறுகிறது, அம் மக்களின் வாழ்வாதாரங்கள் அந்த விவசாய காணியிலேயே தங்கியிருப்பதால் அக்காணிகளை இலங்கை துறைமுக அதிகார சபைக்கு வழங்கி தனியாருக்கு வழங்கும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவேண்டும்.
அதேபோல் நல்லாட்சி காலப்பகுதியில் வழங்கப்பட்ட திட்ட உதவியாளர் நியமனமானது அவர்கள் கடமைக்கு சென்று ஓரிரு வாரங்களுக்கும் இடைநிறுத்தப்பட்டது இதனால் அவர்கள் பல்வேறு பொருளாதார சவால்களை எதிர் கொள்கின்றனர் இதனை கருத்திற்கொண்டு அவ் நியமனங்களை மீள வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கைவிடுத்தார்.
திருகோணமலை தொகுதியிலுள்ள சில பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதை சுட்டிக்காட்டியதுடன், அரசாங்கத்தினால் செயற்படுத்தப்பட்ட அஸ்வெசும திட்டத்தில் சில முறைகெடுகள் இருப்பதாகவும் தெரிவித்ததுடன் உரிய அதிகாரிகள் இப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவரது உரையில் கேண்டுக்கொண்டார்.