இணையவழி ஊடாக வரி கட்டணம் செலுத்தும்போது கொழும்பு மாநகரசபையினால் அறவிடப்பட்டுவந்த சேவை கட்டணம் நீக்கப்பட்டுள்ளது. அதனால் வரி கட்டணம் செலுத்தும்போது சேவை கட்டணம் செலுத்த தேவையில்லை என கொழும்பு மாநகர ஆணையாளர் சட்டத்தரணி ராேஷினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட பிரதேசத்தில் வாழும் மக்கள் தங்கள் வரி கட்டணத்தை மாநகரசபையின் www.colombo.mc.gov.lk என்ற இணையத்தளத்துக்கு சென்று செலுத்துவதற்கு மாநகரசபை இடமளித்திருந்தது. அதன் பிரகாரம் அதிகமான மக்கள் இணைவழி ஊடாக தங்கள் வரி கட்டணங்களை செலுத்தி வருகின்றனர்.
இதேவேளை, கொழும்பு மாநகரசபையினால் வழங்கப்படும் பொது மக்கள் நிவாரண நிதி, கிரேண்ட்பாஸ், கொட்டாஞ்சேனை மற்றும் மாளிகாவத்தை தபால் நிலையங்கள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியாமல்போனவர்கள், எதிவரும் 21ஆம் திகதிக்கு முன்னர் தங்கள் பணத்தை பெற்றுக்கொள்ளுமாறும் மாநகர ஆணையாளர் கோரி இருக்கின்றார்.