வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் பெய்து வரும் கன மழை இன்றைய தினமும் தொடரும் வாய்ப்புள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இலங்கைக்கு கீழாக நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின்பல பகுதிகளுகளிலும் இன்றையதினம் கன மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டின் பல பகுதிகளிலும் தற்போது சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது.
இதனால் பல குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்ட நிலையில் போக்குவரத்தும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வயல் நிலங்களும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் புணானை ஊடான வீதிப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரியவருகிறது .
அத்துடன் குறித்த வீதியால் லொறி டிப்பர் போன்ற பெரிய வாகனங்கள் தவிர்ந்த ஏனைய சிறிய வாகனங்களில் செல்வதை தவிர்ந்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளம் காரணமாக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மூன்று கல்வி வலயங்களுக்கு பாடசாலைகள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி பணிமனை அறிவித்துள்ளது.
மட்டக்களப்பு மத்தி, சம்மாந்துறை மற்றும் அக்கரைப்பற்று ஆகிய மூன்று கல்வி வலயங்களுக்கே குறித்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வியாழன் (11) மற்றும் நாளை (12) ஆகிய தினங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு இந்த நாட்களுக்கு பதிலாக இம்மாதம் பதில் பாடசாலை நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.