சீனாவின் சினோபார்ம் நிறுவனமானது இலங்கையிலும் அதன் தடுப்பூசி நிரப்பும் தொழிற்சாலையொன்றை நிறுவுவதற்கு அவதானம் செலுத்தியுள்ளது.
சீனாவின் சினோபார்ம் நிறுவனத்தின் தலைவர் லியு ஜின்க்சன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் சீனாவுக்கான இலங்கை தூதுவர் கலாநிதி பாலித கோஹேன ஆகியோருக்கு இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இது குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.
இந்த சந்திப்பானது கடந்த 7ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
இலங்கை மக்களுக்காக சினோபார்ம் நிறுவனம் தொடர்ந்து தடுப்பூசி வழங்கி வருவதற்கு நன்றி தெரிவித்து ஜனாதிபதி வழங்கிய கடிதத்தையும் தூதுவர் இதன்போது சினோபார்ம் நிறுவன தலைவருக்கு வழங்கினார்.
இந்நிகழ்வில் கருத்து வெளியிட்ட சினோபார்ம் நிறுவன தலைவர், சினோபார்ம் நிறுவனம் இலங்கைக்கு தொடர்ந்து தடுப்பூசிகளை வழங்குமென தெரிவித்தார். மேலும் சினோபார்ம் தடுப்பூசியானது 100இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விநியோகிக்கப்படுவதாகவும், 50இற்கும் மேற்பட்ட அரச தலைவர்கள் சினோபார்ம் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
சினோபார்ம் தடுப்பூசி பெற்றவர்களுக்கு எவ்விதமான பாதகமான விளைவுகளும் இல்லையெனவும் அதன் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.