அம்பாறை பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் காத்திருந்த நபர் ஒருவரின் கைகளை வெட்டிய அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.
கத்தி மற்றும் வாள்களுடன் வேனில் வந்த சிலரே பஸ் நிலையத்திற்கு அருகில் காத்திருந்த நபரின் கைகளை வெட்டியுள்ளனர்.
அதுமட்டுமின்றி குறித்த சந்தேகநபர்கள் அங்கிருந்த மற்றுமொருவரை தாக்கிவிட்டு, சுற்றியிருந்தவர்களை அச்சுறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 05 சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த நபரும் தாக்கப்பட்ட நபரும் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில், அம்பாறை தலைமையக பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 05 சந்தேக நபர்களை கைது செய்ததுடன் அவர்கள் பயணித்த வேனையும் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், சந்தேகநபர்களில் ஒருவர் தப்பியோடியுள்ளதுடன், அவரை பொலிஸார் தேடிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில், அம்பாறை நகரில் இரு கும்பல்களுக்கிடையிலான தகராறு காரணமாக இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அம்பாறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.