போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட வன்னியின் கொக்குத்தொடுவாய் பகுதியில் ஆறு மாதங்களுக்கு முன்னர் தோண்டப்பட்ட புதைகுழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் பாலினத்தை அடையாளம் காண அடுத்த வாரம் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தை அண்மித்து எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸாரால் ஜூன் மாத இறுதியில் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று (14) அழைக்கப்பட்டு, அங்கு இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பான ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியதாக சட்டத்தரணி வி.கே. நிரஞ்சன் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ள திகதிகள் குறித்து சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றத்திற்கு அறிவித்ததாக தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஏற்கனவே எடுக்கப்பட்ட 40 மனித எலும்புக் கூடுகளில் இருந்து அதனுடைய ஆய்வுகளை, அதன் வயது, அது ஆணா பெண்ணா போன்ற ஆய்வுகளை டிசம்பர் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்வது தொடர்பாக சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் வாசுதேவ நேற்று நீதிமன்றில் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தலைமையில் பாரிய புதைகுழியில் இருந்து எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டன.
கொக்கிளாய், முல்லைத்தீவு பிரதான வீதியூடாக பாரிய புதைகுழி வியாபித்துள்ளதாக தெரியவந்ததையடுத்து, அதனை முழுமையாக தோண்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டதையடுத்து, கடந்த ஜூன் 29ஆம் திகதி, அகழ்வுப் பணிகளை தற்காலிகமாக நிறுத்த நீதிமன்றம் தீர்மானித்திருந்தது.
அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான செலவுகள் குறித்தும் நீதிமன்றில் கலந்துரையாடப்பட்டது.
மார்ச் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள அகழ்வுப் பணிகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
இதற்கான செலவுகள், குறிப்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினரால் வீதி உடைக்கப்பட்டு மீண்டும் திருத்துவதற்கு எவ்வளவு தொகை செலவாகும் போன்ற விடயங்கள் பேசப்பட்டன.
நவம்பர் 29ஆம் திகதி புதன்கிழமை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், அடுத்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் அகழ்வுப் பணிகளை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டது.
அது தொடர்பான மேலதிகத் தீர்மானத்திற்காக இந்த வழக்கை பெப்ரவரி 22ஆம் திகதி மீண்டும் அழைக்க முல்லைத்தீவு நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் தீர்மானித்துள்ளார் .
கொக்குத்தொடுவாய் பாரிய புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணி நவம்பர் 29ஆம் திகதி ஒன்பதாவது நாளாக மேற்கொள்ளப்பட்டு, நண்பகல் வேளையில் நிறுத்தப்பட்ட போது, கொக்குத்தொடுவாய் வெகுஜன புதைகுழியில் இருந்து குறைந்தது 40 பேரின் எச்சங்கங் மீட்கப்பட்டன. அந்த சடலங்கள் விடுதலைப் புலி உறுப்பினர்களுடையது என சந்தேகிக்கப்படுவதற்கும் சில சான்றுகளும் காணப்படுகின்றன’ என சட்டத்தரணி வி.கே. நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.