அரசாங்கம் நாட்டில் அடக்கு முறைகளைப் பிரயோகித்து ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை தயாராகிக் கொண்டிருக்கும்.
அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக மக்கள் அனைவரும் வீதிக்கிறங்கி போராட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.
ஜே.வி.பி. தலைமையகத்தில் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பொருளாதார பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பதிலாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களை அச்சுறுத்தும் வகையில் பழிவாங்கல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்.
அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் மீது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொலிஸ் பலத்தைப்பயன்படுத்தி நீர்தாரை பிரயோகத்தையும் , தடியடிப்பிரயோகத்தையும் மேற்கொண்டுள்ளார்.
எந்த தரப்பினராலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு வீதிக்கு இறங்கினால் அவர்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி எந்த சந்தர்ப்பத்திலும் தயாராகவுள்ளார்.
அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். ரணில் விக்கிரமசிங்க இதே பாதையில் பயணிப்பாராயின் கோட்டாபய ராஜபக்ஷவைப் போன்று மக்களால் விரட்டியடிக்கப்படுவார்.
எனவே இவ்வாறான அடக்குமுறைகளை அவர் உடனடியாக நிறுத்த வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரை உடனடியாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அதே போன்று ஊடகங்களுக்கு எதிரான அடக்குமுறைகளையும் அரசாங்கம் உடன் நிறுத்த வேண்டும். இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஜனாதிபதிக்கு , ஜனநாயகம் குறித்து பேசுவதற்கு எவ்வித உரிமையும் கிடையாது.
தற்போது எமது நாடு ஜனநாயகம் அற்ற , அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்ட உரிமைகளை அழித்துக் கொண்டிருக்கும் நாடாக மாற்றமடைந்து கொண்டிருக்கிறது.
மறுபுறம் ஜனாதிபதி தனது சகாக்களுக்கு சிறப்புரிமைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார். அதற்காக பாரியளவிலான அமைச்சரவையை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்த அரசாங்கம் உள்ளநாட்டில் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் அதே வேளை , ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை தயாராகிக் கொண்டிருக்கும். அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக மக்கள் அனைவரும் வீதிக்கிறங்கி போராட வேண்டும் என்றார்.