ஊர்காவற்றுறை நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது வேலணை அராலிச் சந்தி பகுதியில் வைத்து இனந்தெரியாதோரால் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (9) பதிவான நிலையில், காயமடைந்த 31 வயதுடைய இளைஞர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நெடுந்தீவைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையில் ஏற்கனவே இடம்பெற்ற பிரச்சினை தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நேற்று விசாரணை நடைபெற்றிருந்தது.
அந்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக குறித்த இளைஞர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.
பின்னர் வழக்கு விசாரணை நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர, அவர் வீடு திரும்பிய சந்தர்ப்பத்திலேயே, அவரை வழிமறித்து இனந்தெரியாதோரால் இந்த வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலை நடத்திய சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்


