ஜெனிவாவில் இலங்கை தொடர்பான பிரேரணை இன்று

ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 63 வது வருடாந்த கூட்டத்தொடரின் போது, இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான சமீபத்திய அறிக்கை இன்று (7) முன்வைக்கப்படவுள்ளது.

 

இன்று ஆரம்பமாகும் இந்த கூட்டத்தொடரானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.

 

இந்தக் கூட்டத்தொடர் ஜெனிவா நேரப்படி இன்று காலை 10.00 மணிக்கு இந்தோனேசியாவின் தூதுவர் சித்தார்தோ ரெசா சூர்யோடிபுரோ தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.

 

ஆரம்பக் கூட்டத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் (Volker Türk) உரையாற்றவுள்ளார்.

 

ஒரு மாதம் நீடிக்கும் இக்கூட்டத்தொடரில், விசேட நடைமுறைகளின் ஆணை பெற்றவர்கள், நிபுணர் பொறிமுறைகள் மற்றும் புலனாய்வுப் பொறிமுறைகளை உள்ளடக்கிய 37 ஊடாடும் கலந்துரையாடல்களை பேரவை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

அத்துடன், உயர்ஸ்தானிகர், மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் ஆகியோரால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகள் மற்றும் புதுப்பிப்புகள் குறித்தும் இக்கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்படும்.

 

இந்தக் கூட்டத்தொடரின் போது பரிசீலிக்கப்படவுள்ள விடயங்களில், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் எழுத்துமூலமான புதுப்பிக்கப்பட்ட அறிக்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

 

குறித்த அறிக்கையானது ஏற்கனவே வௌியாகியுள்ள நிலையில், மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை வலுப்படுத்துவதற்கும், நல்லிணக்கம் மற்றும் சமூக ஆற்றுப்படுத்தலை முன்னெடுப்பதற்கும் இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

2025 ஒக்டோபர் முதல் 2026 ஜூலை வரையான காலப்பகுதியை உள்ளடக்கிய இந்த அறிக்கையானது, ஊழலைச் சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அரசியல் கொலைகள், பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான முக்கிய கைதுகள் மற்றும் விசாரணைகள் குறித்துக் சுட்டிக்காட்டுகிறது.

 

இக்காலப்பகுதியானது டித்வா புயல் மற்றும் உலகளாவிய ரீதியில் எரிசக்தி விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு ஆகியவற்றால் ஏற்பட்ட சவால்களுடன் இலங்கை போராடிய ஒரு காலப்பகுதியாகவும் அமைந்தது.

 

எவ்வாறாயினும், சட்ட மற்றும் நிறுவன சீர்திருத்தங்கள் குறித்த அதன் வாக்குறுதிகள் இருந்தபோதிலும், அரசாங்கம் தொடர்ந்து அடக்குமுறைமிக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பயன்படுத்துவதாகவும், இதனால் தன்னிச்சையான கைதுகள் மற்றும் குற்றச்சாட்டுகளின்றி நீண்டகாலத் தடுத்து வைப்புகள் ஏற்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அரச கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவதுடன், காணி மற்றும் மதத் தலங்கள் தொடர்பான பதற்றங்களும் தொடர்ந்து நீடிக்கின்றன.

 

பல தசாப்தங்களாக இடம்பெற்று வரும் நிறைவேற்று அதிகார துஷ்பிரயோகம், அடக்குமுறைச் சட்டங்கள், காவலில் வைக்கப்படும் போது இடம்பெறும் வன்முறைகள் மற்றும் தண்டனை விலக்கு ஆகியவற்றின் அலையை மாற்றியமைக்க இந்த அரசாங்கத்திற்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் குறிப்பிட்டுள்ளார்.

 

ஊழல் வழக்குகள் மற்றும் போர் முடிவடைந்த பின்னரான காலப்பகுதியுடன் தொடர்புடைய சில குற்றங்கள் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளமை ஊக்கமளிக்கும் அதேவேளை, நாட்டில் நீண்டகாலமாக நிலவும் தண்டனை விலக்கு கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டுவர இன்னும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

மின்சார வாகனங்களுக்கு விசேட இலக்கத் தகடுகள்

அனைத்து மின்சார வாகனங்களுக்கும் பச்சை நிற பின்னணியைக் கொண்ட இலக்கத் தகடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.   இதுவரை பச்சை...

தெற்கு அதிவேக வீதியில் சொகுசு கார் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்த சொகுசு காரொன்று இன்று (07) காலை வீதியை விட்டு விலகி பாதுகாப்பு வேலியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.   தொடங்கொட 32.4...