கல்வி நடவடிக்கைகளுக்காக 20 தொலைக்காட்சி அலைவரிசைகளை தொடங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக வெகுஜன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
ஊடக மற்றும் கல்வி அமைச்சு இணைந்து மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தில் முதற் கட்டமாக 1ம் தரம் தொடக்கம் 13ம் தரம் வரை 13 தொலைக்காட்சி அலைவரிசைகளும் சமயம் சார்ந்த கல்வி நடவடிக்கைகளுக்காக 2 தொலைக்காட்சி அலைவரிசைகளும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
நேற்று கண்டி குண்டசாலை பிரதேச செயலகத்தில் 185 மாணவர்களுக்கு சமூர்தி புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் பொழுதே அவர் இதனை குறிப்பிட்டார்.
சமுர்த்தி செழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் உயர்தர மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகளுக்காக மாதம் 1500/= படி இரண்டு வருடங்களுக்கு நிதி உதவி பெற்றுக் கொடுக்கப் படுகின்றது. அதனடிப்படையில் மாணவர்களுக்கு 10 மாதத்திற்கு 15000/= ஒரே கொடுப்பனவில் பெற்றுக் கொடுக்கப் படுகின்றது.
தற்போதைய உலகளாவிய தொற்று நோய் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தொடரக் கூடும் என்றும், மாணவர்களுடைய கல்வி பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும், கல்வியின் சரிவு ஒரு நாட்டின் முதுகெலும்பு உடைவதற்கு சமனானது என்று அவர் தெரிவித்தார்.
தற்பொழுது ஒன்லைன் மூலமாக கல்வி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் சில பிரதேசங்களுக்கு தொலைபேசி சமிஞ்சை இல்லாத காரணத்தினால் மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகி உள்ளதாகவும் தொலைக்காட்சி அலைவரிசை மூலமாக கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் வீடுகளுக்கு கொண்டு செல்ல முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கண்டி நிருபர்