மேல் மாகாணத்தில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஜூலை 31ஆம் திகதிக்கு முன்னர் தடுப்பூசிகளை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுகாதாரத் துறைக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலச் செயற்பாடுகள் குறித்து கொவிட்-19 ஒழிப்பு விசேட குழுவுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (02) இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்தப் பணிப்புரையை விடுத்தார்.
இதேவேளை கொழும்பு மாவட்டத்தில் இந்த வயதுப் பிரிவைச் சேர்ந்த 60 சதவீதமானவர்களுக்கும் கம்பஹா மாவட்டத்தில் 47 சதவீதமானவர்களுக்கும் களுத்துறை மாவட்டத்தில் 34 சதவீதமானவர்களுக்கும் முதலாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செப்டெம்பர் மாதத்துக்கு முன்னர் நாட்டின் அனைத்துப் பிரதேசங்களுக்கும் அதிகளவு தடுப்பூசிகளை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் இதன்போது வலியுறுத்திய ஜனாதிபதி இரண்டாம் டோஸூக்குத் தேவையான அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசிகள் விரைவில் கிடைக்குமென்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.