அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்குக்கும் பெறுமதி இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் ஓரணியில் நிற்கின்றோம். இல்லையேல் மற்றொரு வாக்குக்கு பெறுமதியை அதிகரிப்பது ஜனநாயகத்துக்கும் முற்போக்குக்கும் எதிரானது எனத் தெரிவித்த ஜே.வி.பியின் தலைவரும் எம்.பியுமான அநுரகுமார திஸாநாயக்க “தேர்தல் முறைமையில் மாற்றம் ஏற்படவேண்டுமாயின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையிலும் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும்” என்றார்.
தனது கட்சியின் தலைமையகத்தில் தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் நேற்று (30) நடைபெற்ற சந்திப்புக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“ஜனநாயகம் முற்போக்கு மற்றும் மக்கள் சக்தி பாதுகாக்கப்பட வேண்டும். விகிதாசார முறைமையில் மாற்றம் செய்யப்படுமாயின் அதுவும் இன்னும் மேம்படுத்தக்கூடிய ஜனநாயகம் மற்றும் முற்போக்கை உறுதிப்படுத்தவேண்டும்” என்றும் அவர் கூறினார்.
“மக்களின் சாதாரண விருப்பங்கள் பாராளுமன்றம் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது உறுதிப்படுத்தப்பட வேண்டும். வாக்கொன்றுக்கு பெறுமதி வேண்டும். இல்லையேல் கட்சிகள் மீண்டும் பழைய நிலைமைக்கே செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இது ஜனநாயகத்தையும் முற்போக்கையும் மக்களின் சக்தியையும் கேள்விக்கு உட்படுத்திவிடும்” என்றார்.