இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக ஜஸ்வர் உமர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இன்று (30) இடம்பெற்ற இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன புதிய நிர்வாக சபை தெரிவு தேர்தலில் அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அதற்கமைய, 96 வாக்குகளை பெற்ற ஜஸ்வர் உமர் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, அவரை எதிர்த்து போட்டியிட்ட வைத்தியர் மணில் பெனாண்டோ 90 வாக்குகளை பெற்றிருந்தார்.
கண்டி, காலி, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் இன்று இத்தேர்தல் பிற்பகல் ஒரு மணிக்கு இடம்பெற்றிருந்தது.
இதில் வாக்களிக்க அகில இலங்கையில் இயங்கிவரும் 62 கால்பந்தாட்ட லீக் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் பொருளாளர்கள் 186 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
குறித்த தேர்தல் கொவிட்-19 பயணக்கட்டுப்பாடு காரணமாக பல தடவைகள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.
FIFA மற்றும் ஆசிய கால்பந்தாட்ட சம்மேளன (AFC) உறுப்புரிமை கொண்ட முன்னாள் சிரேஷ்ட கால்பந்தாட்ட நடுவரான ஜஸ்வர் உமர், இலங்கை கால்பந்தாட்ட சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளராவார்.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நிருவாக சபை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும்போது 115 க்கு 71 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் தனது வெற்றி உறுதி என ஜஸ்வர் உமர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட, வைத்தியர் மணில் பெனாண்டோ, இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நிர்வாகிகளில் ஒருவரான மணிலால் பெனாண்டோவின் புதல்வராவார்.
ஜஸ்வர் உமர் அணியில் போட்டியிட்ட, முன்னாள் பிரதித் தலைவர் உபாலி ஹேவகே (சீதாவாக்கை கால்பந்தாட்ட லீக்கின் தலைவர்) பொதுச்செயலாளர் பதவிக்கு தெரிவானார்.