அம்பலாந்தோட்டை நகரின் மையப்பகுதியில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று காலை கோடரி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ஒருவர் எனவும் அதிகாரியின் தலைப்பகுதிக்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் கழுத்துப் பகுதிக்கு விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் பொலிஸ் அதிகாரியை கோடரியால் தாக்கிய பின்னர் விஷம் அருந்தியுள்ள நிலையில்,குறித்த நபரும் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
கடந்த மாதம் அம்பலாந்தோட்டை பொலிஸாரினால் குடிபோதையில் வாகனம் செலுத்தியமைக்கான குறித்த நபருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் கோபமுற்ற சந்தேகநபர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.