கடன் திட்ட அடிப்படையில் பாகிஸ்தானிடம் இருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான அரிசி மற்றும் சீமெந்தை இறக்குமதி செய்ய இலங்கை முயற்சிக்கிறது.
இதற்கான பேச்சுக்கள் இடம்பெறுவதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமது பாகிஸ்தானிய பயணத்தின்போது கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து இலங்கை அரச வர்த்தக் கூட்டுத்தாபம், விரைவில் வர்த்தக அமைச்சுக்கு உடன்படிக்கை வரைபு ஒன்றை சமர்ப்பிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி இந்த வருடத்துக்குள் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு சீமெந்து, பாஸ்மதி அரிசி என்பன இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கானுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது, தற்போது பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் பெறுமதியை 500 மில்லியன் டொலர்களில் இருந்து 2 பில்லியன் டொலர்களாக உயர்த்தும் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.