ஆசன எண்ணிக்கைக்கு அமைய, பயணிகளை அழைத்து செல்ல வேண்டும் என நிபந்தனையின் பிரகாரமே, பஸ் கட்டண அதிகரிப்புக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன தெரிவிக்கின்றார்.
எனினும், பல்வேறு காரணங்களினால் ஆசன எண்ணிக்கைக்கு மேலதிகமான பயணிகள் பஸ்களில் பயணிப்பதாகவும் அவர் கூறுகின்றார்.
இதேவேளை, நின்றுக்கொண்டு பயணிக்கும் பயணிகளுக்கான கட்டணத்தை குறைப்பது குறித்தும் கெமுணு விஜேரத்ன இதன்போது கருத்துரைத்தார்.
ஆசன எண்ணிக்கையின் பிரகாரம், பயணிகளை அழைத்து செல்வதற்கு தாமும் இணக்கம் என அவர் கூறினார்.
எனினும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால், பஸ்களுக்கான சரியான நேர அட்டவணை தயாரிக்கப்படவில்லை எனவும், அவ்வாறு நேர அட்டவணை தயாரிக்கப்படும் பட்சத்தில் அதனை அமுல்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு சரியான முறைமையொன்று தயாரிக்கப்படும் பட்சத்தில், ஆசன எண்ணிக்கைக்கு அமைய பயணிகளை அழைத்து செல்ல தாமும் தயார் என கெமுணு விஜேரத்ன குறிப்பிடுகின்றார்.