நாளை (10) முதல் நாளாந்தம் மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாட்டுகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
இலங்கை பொதுப்பயன்பாட்டுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க, இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் மின் வெட்டை அமுல்படுத்துவதற்கு நேர்ந்துள்ளதாகவும், அதற்கான அனுமதியை பெற்றுத் தருமாறும் இலங்கை மின்சார சபை, பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரியிருந்ததாக அவர் கூறினார்.
மின்சார உற்பத்தி, மின்சார விநியோகம் ஆகிய நடவடிக்கைகளுக்கு இடையில் ஏற்படுகின்ற இடைவெளியை நிவர்த்தி செய்துக்கொள்ள முடியாமையினாலேயே, மின்சார சபை இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டிய காலப் பகுதி மற்றும் நேரத்தை இலங்கை மின்சார சபையே தீர்மானிக்கும் எனவும் அவர் கூறுகின்றார்.
மின்சார பாவனையாளர்கள், கடந்த ஓரிரு வருடங்களாக தமக்கான மின்சார கட்டணத்தை செலுத்த தவறியுள்ளமையே, மின் வெட்டை அமுல்படுத்த காரணம் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
கடந்த ஓரிரு வருடங்களில் மாத்திரம் சுமார் 40 பில்லியன் ரூபாவிற்கும் அதிக தொகையை மின் பாவனையாளர்கள், இலங்கை மின்சார சபைக்கு செலுத்த தவறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இதனால், இலங்கை மின்சார சபை பாரிய நட்டத்தை எதிர்நோக்கியுள்ளமையினால், மின்சார உற்பத்திக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கூட பணம் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
மின்வெட்டு அமுல்படுத்துவதற்கு, மின் பாவனையாளர்களும் ஒரு காரணம் என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இதனால், மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை உரிய முறையில் செலுத்துமாறு இலங்கை பொதுப்பயன்பாட்டுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க கேட்டுக்கொண்டுள்ளார்.