தேசிய கொள்கைக்கு அமைய, பேருந்துக் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று (29) அறிவிக்கப்படவுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் உதிரிப்பாகங்களின் விலைகள் அதிகரிப்பு உள்ளிட்ட சில விடயங்களின் அடிப்படையில், பேருந்துக் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தலைமையில், போக்குவரத்து அமைச்சில் இது தொடர்பான பேச்சுவார்த்தை, இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால், இதற்கு அமைவாக தயாரிக்கப்பட்ட பரிந்துரைகள், போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவிடம் இதன்போது கையளிக்கப்படவுள்ளன.
தற்போது 14 ரூபாவாகவுள்ள குறைந்தபட்ச பேருந்துக் கட்டணத்தை, 2 ரூபாவினாலும், ஏனைய கட்டணங்களை 10% என்ற அளவிலும் அதிகரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பேருந்துக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், பேருந்துக் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்வதை விடவும், டீசல் மானியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.
டீசல் மானியம் வழங்காவிட்டால், 14 ரூபாவாக உள்ள ஆகக்குறைந்த பேருந்துக் கட்டணம் 20 ரூபா வரையில் அதிகரிக்கப்பட வேண்டும்.
அத்துடன், ஏனைய கட்டணங்கள், 20 சதவீதமளவில் அதிகரிக்கப்பட வேண்டும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.