குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்தப்பட்டமை தொடர்பாக, அந்தப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராகக் கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இன்று (30) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை உறுதிப்படுத்தினார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கனேமுல்ல சஞ்சீவ (Ganemulla Sanjeewa) கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான 25 வயதான பிங்குர தேவகே இஷாரா செவ்வந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, அங்கு விசேட விருந்துபசாரம் மற்றும் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்தன.
இது தொடர்பாக கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் தனிப்பட்ட ரீதியில் விசாரணைகளை முன்னெடுத்தார்.
பொலிஸ் அதிகாரிகள் ஒருபோதும் குற்றவாளிகளுடன் அல்லது சந்தேக நபர்களுடன் இவ்வாறான நெருக்கமான தொடர்புகளைப் பேண முடியாது.
இது எமது தொழில்முறை ஒழுக்கக் கோவைக்கு முரணான செயலாகும். அதன்படி, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராகக் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.”
மேலும், அனைத்துப் பொலிஸ் அதிகாரிகளும் தங்களது கௌரவத்தையும் தொழில்முறை ஒழுக்கத்தையும் பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.






