ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக ஈரானின் புதிய உச்சத்தலைவர் மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார்.
வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மூடப்படாவிட்டால் தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் ஈரானின் புதிய உச்ச தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானின் புதிய அதி உயர் தலைவர் மொஜ்தபா கமேனி, பதவியேற்றதன் பின்னர் முதன்முறையாக உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அந்த நாட்டு அரச தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பின் ஊடாகவே அவர் இவ்வாறு எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உரையில், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அனைத்து அமெரிக்க தளங்களையும் உடனடியாக மூடுமாறு கமேனி அழைப்பு விடுத்தார், இல்லையெனில் அவை ஈரானால் குறிவைக்கப்படும் என்று கூறினார்.
எவ்வாறாயினும், ஈரான் அண்டை நாடுகளுடன் நட்புறவு மற்றும் ஒத்துழைப்பிற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும், தாக்குதல்கள் அமெரிக்க இராணுவத் தளங்களை மட்டுமே இலக்காகக் கொள்ளும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், ஈரானுக்கு எதிரான தரப்பினருக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில், ஹோர்முஸ் நீரிணையை தொடர்ந்து மூடிவைக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொல்லப்பட்ட ஈரானியர்களின் இரத்தத்திற்குப் பழிவாங்க ஈரான் தயங்காது என்றும் மொஜ்தபா கமேனி குறிப்பிட்டுள்ளார்.






