விடுதலைப் புலிகள் அமைப்பை அழிப்பதற்கு அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே அர்ப்பணிப்புடன் செயற்பட்டார் ஆகவே புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களை திருப்திப்படுத்துவதற்காகவே சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். இது முறையற்றது என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் புதன்கிழமை (25) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
விடுதலை புலிகள் அமைப்பை அழிப்பதற்கு இராணுவ வீரனாக சுரேஷ் சலே அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.அதன் பின்னர் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக பதவி வகித்து நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.
புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டாலும், பிரிவினைவாத ஆதரவாளர்கள் உலகளாவிய ரீதியில் வியாபித்துள்ளார்கள்.அவர்கள் சுரேஷ் சலே மீது வெறுப்புக் கொண்டு அவரை பழிவாங்குவதற்கு எதிர்பார்த்திருந்தார்கள்.அதற்காகவே அவர்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை தெரிவு செய்தார்கள்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பளம் தொடர்பில் பிரித்தானியாவின் செனல் -04 நிறுவனம் வெளிப்படுத்திய விடயங்களை அடிப்படையாகக் கொண்டு 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்தவுடன் சுரேஷ் சலே மற்றும் பிள்ளையானை கைது செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட இமாம் குழுவின் அறிக்கையால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் நோக்கம் வெற்றிப்பெறவில்லை.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை பகிரங்கப்படுத்துவதாக குறிப்பிட்டுக்கொண்டு அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக பிள்ளையான் கைது செய்யப்பட்டார்.
குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிள்ளையான் கைது செய்யப்பட்டதாக ஜனாதிபதியும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் குறிப்பிட்டார்கள். ஆனால் குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிள்ளையானிடம் விசாரணை அதிகாரிகள் ஏதும் கேட்கவில்லை.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதிக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புப்படுத்தி ஏதேனும் செய்ய வேண்டும் என்பதற்காக அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானியான சுரேஷ் சலே தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலை புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களை திருப்திப்படுத்தும் செயற்படாகவும் இதனை பார்க்கலாம் என்றார்.






