தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சியையும் அவரது மனைவியையும் சுட்டுக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிதாரி மொனராகலையில் வைத்து செவ்வாய்க்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளார்.
மொனராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நக்கல தெங்வத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் இனந்தெரியாத நபர் ஒருவர் தங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது காலி, வந்துரம்ப பகுதியைச் சேர்ந்த இரண்டாவது துப்பாக்கிதாரி மற்றும் நண்பர் ஒருவர் வழங்கிய அறிவுறுத்தலுக்கமைய சந்தேக நபரை மொனராகலைக்கு அழைத்து வந்த அங்கொட பகுதியைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மொனராகலை வாலந்த ஒப்பந்த நிறுவனத்தின் கட்டுமானப் பணிகளுக்காக வந்துள்ளார். அங்கு அவருக்கு வழங்கப்பட்ட நக்கல தெங்வத்தை பகுதியிலுள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்து கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வந்தபோதே பொலிஸாரால் பிடிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற இந்த இரட்டைக்கொலைச் சம்பவத்தின் முதல் சந்தேக நபர் ஏற்கனவே அம்பலங்கொட, தெல்தூவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மொனராகலை பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ அவர்களின் ஆலோசனையின் கீழ், மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.எம்.எஸ்.டி. விக்ரமசிங்கவின் வழிகாட்டலில் மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






