புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு சவூதி அரேபிய அரசாங்கம் இலங்கை முஸ்லிம்களுக்காக 50 தொன் பேரீச்சம்பழங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
இந்நிகழ்வு 16ஆம் திகதி கொழும்பில் அமைந்துள்ள சவூதி தூதரகத்தில் நடைபெற்றது.
இலங்கைக்கான சவூதி தூதுவர் காலித் மஹ்மூத் அல் கஹ்தானி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் (KSrelief) வழங்கிய பேரீச்சம்பழ நன்கொடையை சமய விவகாரங்கள் மற்றும் கலாச்சார பிரதி அமைச்சர் முனீர் முலாஃபர் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, வெளிநாட்டு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா உள்ளிட்ட பல அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மேலும் KSrelief பிரதிநிதி, முஸ்லிம் சமய மற்றும் கலாசார விவகார திணைக்களத்தின் பணிப்பாளர், அமைச்சின் உயர் அதிகாரிகள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில், உரையாற்றிய பிரதி அமைச்சர் முனீர் முலாஃபர், இந்நன்கொடை மூலம் சவுதி அரேபியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்பு மற்றும் ஒத்துழைப்பு மேலும் வலுப்பெறும் என தெரிவித்தார்.
ரமழான் காலத்தில் இந்நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகம் சவூதி அரேபியாவுக்கு நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.






