2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 02 ஆம் திகதிக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்ட சிம் (SIM) அட்டைகளுக்குரிய சந்தாதாரர் தகவல்களை மீண்டும் பதிவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று (09) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க இலங்கை தொலைத் தொடர்புகள் சட்டத்தின் கீழ், 2019 ஆம் ஆண்டில் சிம் அட்டை பதிவு செய்தல் தொடர்பான ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்டன. இருப்பினும், அந்த விதிகள் 2019.08.02 ஆம் திகதிக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட சிம் அட்டைகளுக்கு மட்டுமே பொருந்தும் வகையில் அமைந்திருந்தன.
இதனால், அந்தத் திகதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட சிம் அட்டைகள் தொடர்பான போதிய தகவல்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இல்லை என்பதும், இது சட்ட விசாரணைகளின் போது சிக்கல்களை ஏற்படுத்துவதும் கண்டறியப்பட்டுள்ளது.
இதனைச் சரிசெய்வதற்காகவும், தற்காலத் தேவைகளுக்கு ஏற்ப ஒழுங்குவிதிகளைத் திருத்தவும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இத்திருத்தங்களில் பின்வரும் முக்கிய அம்சங்கள் உள்ளடக்கப்படவுள்ளன:
2019.08.02 திகதிக்கு முன்னர் பெறப்பட்ட சிம் அட்டைகளின் தகவல்களை மீளப் பதிவு செய்தல்.
16 – 17 வயதுக்கு இடைப்பட்ட சந்தாதாரர்களைப் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள்.
இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்குச் சிம் அட்டைகளை வழங்குவதற்கான புதிய ஏற்பாடுகள்.
இதற்கமைய, சந்தாதாரர் சிம் அட்டை பதிவு செய்தல் தொடர்பான புதிய ஒழுங்குவிதிகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.






