இலவங்கப்பட்டை தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ததன் மூலம் கடந்த ஆண்டில் 260 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 8,000 கோடி ரூபா) வருமானத்தை ஈட்ட முடிந்ததாக இலவங்கப்பட்டை அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தில் 300 மில்லியன் அமெரிக்க டொலர் இலக்கை அடைவதற்குத் தமது நிறுவனம் எதிர்பார்ப்பதாக அந்தத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜனக லிந்தர தெரிவித்தார்.
இலவங்கப்பட்டை தயாரிப்புகளுள் அதிகளவு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது ‘இலவங்கப்பட்டை சுருள்கள்’ ஆகும். இதன் மூலம் மாத்திரம் 251 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. ஏனைய வருமானம் இலவங்கப்பட்டை பட்டை, இலைகள் மற்றும் எண்ணெய் ஆகியவற்றின் மூலம் கிடைத்துள்ளது.
இலங்கையின் வரலாற்றில் இலவங்கப்பட்டை சார்ந்த தயாரிப்புகள் மூலம் ஈட்டப்பட்ட அதிகூடிய வருமானமாக இது கருதப்படுகிறது.
இலங்கை இதற்கு முன்னர் சுமார் 70 நாடுகளுக்கு மாத்திரமே ஏற்றுமதி செய்திருந்த போதிலும், 2025 ஆம் ஆண்டில் 100 இற்கும் மேற்பட்ட நாடுகளுக்குத் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்துள்ளதாக ஜனக லிந்தர குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “இலங்கையின் இலவங்கப்பட்டை உலகில் ‘சிலோன் சினமன்’ (Ceylon Cinnamon) என்ற பெயரில் மிகவும் பிரபலமடைந்துள்ளது. அதன் சுகாதார பாதுகாப்பு மற்றும் மருத்துவ குணங்களே இதற்குக் காரணம். 2026 ஆம் ஆண்டளவில் 300 மில்லியன் அமெரிக்க டொலர் இலக்கை அடைய நாங்கள் எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்தார்.






