லயன்ஸ் சர்வதேச மாவட்ட 306 D3 இன் ஏற்பாட்டில், தமிழர்களின் பாரம்பரிய அறுவடைத் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு “Pongal Fiesta 2026” கலை, கலாசார மற்றும் விளையாட்டு விழா வத்தளை சாகர மைதானத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
“அறுவடை மற்றும் ஒற்றுமையின் உணர்வைக் கொண்டாடுவோம்” எனும் தொனிப்பொருளில் அமைந்த இந்த விழாவில், மாவட்ட ஆளுநர் லயன் ஹியூ போஸ்கோ சில்வா (PMJF PMAF) அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன், அவருடன் அவரது பாரியார் லயன் கிரிஷாந்தி பெர்னாண்டோபுள்ளே (MJF MAF) அவர்களும் கௌரவ அதிதியாகக் கலந்துகொண்டார்.
விழாவின் ஆரம்பத்தில் பாரம்பரிய முறைப்படி மங்களகரமாக பொங்கல் இடப்பட்டு வழிபாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில், மாணவர்களின் கண்கவர் நடனங்கள் தமிழர்களின் கலாசார விழுமியங்களை மிக அழகாகப் பறைசாற்றியதுடன் பார்வையாளர்களின் பாராட்டுக்களையும் பெற்றன. நிகழ்வின் ஒரு அங்கமாக, சமூக சேவையில் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் சிறப்பு அதிதிகளுக்கு லயன்ஸ் மாவட்டத்தின் சார்பில் கௌரவிப்புக்கள் வழங்கப்பட்டன.

மேலும், உறுப்பினர்களிடையேயும் மாணவர்களிடையேயும் உற்சாகத்தையும் ஒற்றுமையையும் வளர்க்கும் நோக்கில் பல்வேறு பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாக நடத்தப்பட்டன. இதில் லயன்ஸ் மற்றும் லியோ உறுப்பினர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றதுடன், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் கலை நிகழ்ச்சிகளில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கும் பிரதம அதிதியால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
விழாவில் கலந்துகொண்டவர்கள் பாரம்பரிய உடைகளில் மிளிர்ந்தது விழாவிற்கு ஒரு முழுமையான பண்பாட்டு அழகைச் சேர்த்தது.
இந்த விழாவினை மாவட்டத்தின் பிரதி ஜி.எஸ்.டி ஒருங்கிணைப்பாளர் லயன் ஆர். நமசிவாயம் (MJF, MAF) அவர்கள் மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார். லயன்ஸ் மற்றும் லியோ உறுப்பினர்கள் அனைவரும் ஒரு குடும்பமாக ஒன்றிணைந்து, மகிழ்ச்சியையும் நல்லிணக்கத்தையும் பகிர்ந்து கொண்ட இந்தத் தைப்பொங்கல் திருநாள் ஒரு மறக்க முடியாத சமூக ஒற்றுமை விழாவாக இனிதே நிறைவு பெற்றது.







